ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ.!
செங்கல்பட்டு: ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட வருவாய் கோட்ட அதிகாரியின் (ஆர்.டி.ஓ) வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, அங்கிருந்து லஞ்சமாக பெறப்பட்ட வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
திருத்தணியில் ஆர்.டி.ஓ.வாக இருப்பவர் சந்திரசேகர். இப்பகுதியில் சங்கர் என்பவர் அனுமதி இல்லாமல் கல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு ரெய்டு நடத்திய சந்திரசேகர், குவாரியை மூடாமல் இருக்க வேண்டுமானால் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து சங்கரும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் வாஷிங் மெஷின் சிறிதாக இருந்ததால் பெரிசாக வேண்டும் என்று கேட்டுள்ளார் சந்திரசேகர். இதையடுத்து பத்தாயிரம் பணம் தருகிறேன். நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் சங்கர்.
இந்தப் பணத்தை தனது உறவினரான பாபு என்பவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் பாபு, லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சந்திரசேகரின் வீட்டுக்குச் சென்ற பாபு அங்கு வைத்துப் பணத்தைக் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த போலீஸார் அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் செங்கல்பட்டில் உள்ள சந்திரசேகரின் வீட்டிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
பெரிய வாஷிங் மெஷினாக கேட்டு சிக்கிய சந்திரேசகரால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications