பன்றி காய்ச்சல்: மக்கள் தவிக்கிறார்கள்-வைகோ

மத்திய சுகாதாரத் துறை துணைச் செயலார் மிக அலட்சியமாக இந்தியாவில் இந்நோய் பரவும் ஆபத்து குறைவு என்று ஜுன் மாதம் இறுதியில் கருத்து கூறினார். ஆனால், நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்தியாவில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு கோடி பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்குவதற்கு டாமிபுளு' மருந்து மாத்திரைகள் சுமார் ஒரு கோடி மட்டுமே மத்திய சுகாதார துறையின் வசம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கையிருப்பில் உள்ள டாமிபுளு' மருந்துகள் சுமார் ஏழு லட்சத்து 14 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே போதுமானதாகும். ஆனால், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் தொகையின் அளவு நாளுக்குநாள் அதிகரிக்கும் நிலையில், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியுறுவதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ள பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள அரசு மருத்துவமனைகளை நாடினால் அங்கு மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் ஆய்வுக் கூடத்தில் போதிய மருத்துவர்களும், ஊழியர்களும் இல்லாததால் பரிசோதனைக்காக குவிந்துவரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
பரிசோதனை முடிவுகளுக்காக மக்கள் ஒருவாரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடருகிறது. தனியார் ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்நிறுவனங்கள், கருவிகள் மற்றும் சாதனங்கள் பற்றாக்குறையால் உடனடியாக அரசு கூறுவது போன்று சோதனை செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டன.
தமிழக அரசின் அலட்சியப்போக்கால் பன்றி காய்ச்சல் நோயிலிருந்து விடுபட முடியாமல் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் தவிக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள மூன்று முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கு ஆறுமாதகாலம் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்று கூறியுள்ளன. ஆகவே இந்நோயின் தன்மையை அலட்சியப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications