அதிமுகவின் புறக்கணிப்பை மக்கள் ஏற்கவில்லை - சிபிஎம்
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அதிமுகவின் அழைப்பை மக்கள் ஏற்கவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
வரலாறு காணாத வகையில் மகா மோசமாக தோற்றுள்ளது இடதுசாரிகள் கூட்டணி. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளனர், டெபாசிட்டையும் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக அறிவித்த தேர்தல் புறக்கணிப்பை மக்கள் ஏற்கவில்லை என்று கூறியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயலாளர் என்.வரதராஜன்உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வரதராஜன் பேசுகையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதமானது, தேர்தல் புறக்கணிப்பு வாதத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது.
முக்கிய எதிர்க்கட்சி, தேர்தலில் பங்குகொள்ளாத நிலையில், திமுக, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களின் முன்னணியினர் முழு பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பெரும் செலவு செய்யப்பட்டது. எனினும் ஆளும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக கணிசமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சொந்த ஊர்களில் குடியமர்த்தி அவர்களுடைய மனித உரிமைகளை காக்க வேண்டும். சுயாட்சி உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண வேண்டும். அரசுரீதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க கோரி வரும் 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் சேர்ந்து மிக சொற்பமான வாக்குகளைப் பெற நேர்ந்ததற்கு என்ன காரணம் என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை வரதராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.