For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

By Staff
Google Oneindia Tamil News

Indian Navy
டெல்லி: இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே.

இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.

கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்...

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.

அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர். அந்தப் பட்டியலில் - வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரஸ் கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தர மாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.

எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.

முதலில் போன ஹெலிகாப்டர்கள்...

2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால்.

ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம். இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2ஆம் பக்கம் >>

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X