தீவிரவாத ஒழிப்பு - இந்தியா, அமெரிக்காவுக்குப் பயிற்சி தர இலங்கை தயாராம்!
30 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாகப் போராடியும் ஒன்றும் முடியாமல், பல நாட்டு ஆயுத பலத்தின் துணையுடன் விடுதலைப் புலிகளை அடக்கியுள்ள நிலையில், இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா.
இது குறித்து அவர் கூறுகையில்,
விடுதலை புலிகளை தோற்கடித்ததை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் தனக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு நாங்கள் ஆதரவான பதிலை கொடுக்கலாம் என இருக்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாகிஸ்தானுக்கு ஆறு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். புலிகள் விவகாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து பலரும் எங்களிடம் பயிற்சி கேட்டு வருகின்றனர்.
இதையடுத்து எங்களது ராணுவ பயிற்சி தொடர்பானவற்றை ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்துள்ளோம். பாகிஸ்தானுக்கு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் பயிற்சி அளிக்கப்படாது. அவர்களுக்கு தென் கிழக்கு பகுதியில் பயி்ற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு தூதரக ரீதியாக தகவல் அனுப்பியுள்ளோம்.
வடகிழக்கு பகுதியில் உள்ள கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்படும் என்றார் ஜெயசூர்யா.