கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் மோதி 5 மீனவர்கள் காயம்
சென்னை: சென்னை அருகே மீனவர்கள் வந்த படகு மீது இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பல் மோதியதில் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
சென்னை அருகே காசிமேடு பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் நேற்று இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்த பக்கமாக வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் எதிர்பாராத விதமாக மீனவர்கள் மீது மோதியது.
இதில் மீனவர்களின் இரண்டு படகுகளும் உடைந்து கடல் நீரில் மூழ்கியது. படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலுக்குள் குதித்து உயிர்தப்பினர். கப்பல் மோதியதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
கடலில் தத்தளித்து கொண்டிருந்த அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களது பெயர்கள் மோகன்(40), அருணாசலம்(40), தேவதாஸ்(34), நரேஷ்(23), பழவேற்காட்டை சேர்ந்த ரத்தின வேல்(40) என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.