தமிழர் இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும்-சீமான்
தூத்துக்குடி: ஈழத்தில் தமிழர்கள் சொந்த நாட்டில் கைதிகளாக வாழ்கிறார்கள். அடுத்த ஆண்டு மே 17ம் தேதி முதல் தமிழர் இயக்கம், அரசியில் இயக்கமாக மாறும் என சினிமா இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு கடந்த பல மாதங்களாக அங்குள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.
இந்த கொடுஞ்செயலை எந்த நாடும் தட்டிக் கேட்கவில்லை என்றால் மீண்டும் மக்கள் போராட்டம் நடக்கும் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்கா குரல் கொடுக்கிறது. ஆனால் அருகில் உள்ள இந்தியா என்ன செய்கிறது.
முதலில் கன்னிவெடிகளை அகற்றப்பட்ட பிறகு தமிழர்களை விடுதலை செய்கிறோம் என மககள் மீது அதிக அக்கறையுள்ளது போல இலங்கை அரசு சொன்னது. ஆனால் இதுவரை விடுவிக்கவில்லை.
இலங்கை மக்களுக்கு இலவச நிலம் கொடுத்து வீடுகள் கட்டி கொடுக்கும் அரசு, தமிழர்களை அடிமாடுகள் போல் ஒரு முள்வேலி சிறைக்குள் அடைத்துள்ளது. சிறைகளில் உள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் எதுவும் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்வுக்கு பாதுகாப்பு இல்லை.
24 ஆயிரம் பேருக்கு அம்மை...
அவர்கள் சொந்த நாட்டில் கைதிகளாக, அகதிகளாக வாழும் நிலை உள்ளது. அங்கு அடைபட்டுள்ள 24 ஆயிரம் பேருக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. 6 ஆயிரம் பேருக்கு ம்ஞ்சள் கமாலை நோய் தாக்கியுள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இதில் சர்வதேச நாடுகள், மனிதநேயம் மிக்க தலைவர்கள் தலையிட்டு தமிழ் மக்களுக்கு விடுதலைக்கு வித்திட வேண்டும். இதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் 29ம் தேதி மாலை பேரணி நடக்கிறது. எங்களது குரல் இறையாண்மைக்கு எதிரானது அல்ல.
அடுத்த ஆண்டு மே 17ம்தேதி முதல் நமது தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதனை சென்னையில் மாநாடு நடத்தி அறிவிக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications