பணம் கேட்டு மிரட்டல் - குறி சொல்லும் பெண் சாமியார் கைது
திருவண்ணாமலை: மது குடித்து விட்டு குறி சொல்லும் பெண் சாமியார் பண மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை புது கார்கானா தெருவை சேர்ந்தவர் துரை. 60 வயதான இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுதா. இவருக்கு 27 வயதாகிறது.
இருவரும், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கருப்பசாமி கோட்டை என்ற ஆசிரமத்தை நிறுவினர். அங்கு சுதா கடந்த 3 மாதமாக கருப்பசாமி தன்மேல் வந்து அருள்வாக்கு கூறுவதாகச் சொல்லி, பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார்.
சுதா குறி சொல்லும் போது, அவருக்கு ஒரு வித சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக வேல் ஒன்றை அவரது தந்தை துரை வழங்குவார். பின்னர் குறி சொல்லும் சுதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை வழங்குவார்கள். அந்த மதுபானங்களை சுதா அப்படியே குடித்தபடியும், சுருட்டை எடுத்துப் புகைத்தபடியும் குறி சொல்வாராம்.
சுதா காணிக்கை விஷயத்தில் படு கறாராக இருப்பாராம். குறி சொல்லி பலிக்கவில்லையே என்று வந்தாலும் கூட அவர்களிடமும் பணம் பறிப்பாராம் சுதா.
அவர் மீது போலீஸில் பொதுமக்கள் பெருமளவில் புகார்களைக் குவித்தனர். இதையடுத்து குறி சொல்வதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக சுதா, தந்தை துரை ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் கைது செய்தார்.
இருவர் மீதும் மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications