கிலானியை கொல்ல தாலிபான் சதி-50 தற்கொலை படையினர் ஊடுருவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல தாலிபான் அமைப்பு 50 தற்கொலை படை தீவிரவாதிகளை ஊடுருவ செய்துள்ளது என பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வட மேற்கு பாகிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு அரசு அமெரிக்காவின் துண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், சமீபத்தில் தாலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மசூத் அமெரிக்காவின் தாக்குதலில் பலியானார். தற்போது புதிய தலைவராக ஹக்கீமுல்லா மசூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசு மீது கடும் தாக்குதல் நடத்த முயன்று வருகின்றனர். இதையடுத்து அவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், பிரதமர் யூசுப் ரசா கிலானி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபி்ன் தம்பியும், பஞ்சாப் முதல்வருமான ஷபாஸ் ஷெரிப், மற்றும் பெரிய அதிகாரிகளையும் அவர்களது சொந்தக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், முக்கிய தலைவர்கள், அதிகாரிகளை கடத்தி வைத்து கொண்டு தாலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என மிரட்டலாம். முக்கியமாக அவர்கள் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஜூபைரை விடுவிக்க கோருவார்கள்.
இதற்காக தாலிபான்கள் பஞ்சாப் மற்றும் வட கிழக்கு மாகாணத்துக்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் 50 பேரை ஊடுருவ செய்துள்ளனர். இவர்கள் ஒரு மாதத்துக்குள் தங்களது திட்டங்களை நிறைவேற்றும் முடிவுடன் களமிறங்கியுள்ளனர் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.