கேரள எல்லையில் 127 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 127 மூடை ரேசன் அரிசி பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு அரசு ரேசன் கடைகளில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சில கடத்தல்காரர்கள் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் இந்த அரிசியை தமிழகத்திலிருந்து இருந்து கேரளாவுக்கு ஆட்டோ, பஸ், ரயில் மூலம் கடத்தி சென்று ரூ.5க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதை தடுக்க தமிழக அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. கேரள எல்லைப்பகுதிகளில வருவாய்துறை, மற்றும் காவல்துறையினர் மூலம் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எல்லைகளிலுள்ள சோதனை சாவடிகளை கடந்து ஒரு மினி லாரி ஒன்று இடுக்கி மாவட்டம் காலடி என்ற பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
தென்மலை, கழுதூருட்டி அருகே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மினி லாரியை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் தமிழக ரேசன் அரிசி 127 மூடைகள் கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூடையும் சுமார் 50 கிலோ எடை கொண்டதாகும். அதில் ஜெயா பிரான்ட் அரிசி என முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் அரிசி மூடைகளையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்தா மாதம் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மூடை அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 127 மூடை பிடிப்பட்டுள்ளது. லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்டுள்ள அரிசியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்றார்.