4 மகன்களை கருணை கொலை செய்ய பெற்றோர் மனு
மரிசாபூர்: தசைத்திறன் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் தங்களது நான்கு மகன்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெற்றோர் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
உத்தரபிரதேச தலைநகர் லக்னௌவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் மிர்சாபூர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பஷி கிராமத்தை சேர்ந்தவர் ஜீத் நாராயணன். விவசாயி.
இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு துர்கேஷ் (16), சர்வேஷ் (14), பிரஜேஷ் (11), சுஷில் (10) என 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தசைத்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜீத் நாராயணன் கூறுகையில்,
எனது மகன்களால் சொந்த காலில் நிற்க முடியாது. அவர்களால் கழுத்து பகுதியை மட்டுமே அசைக்க முடியம். அதற்கு கீழே உள்ளவற்றை அசைக்க முடியாது. அவர்கள் படும் துன்பத்தை நான் தினமும் நேரில் பார்த்து வருகிறேன்.
அவர்களுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று செலவு செய்துவிட்டேன். அது போக ரூ. 2 லட்சம் கடனும் வாங்கி மருத்துவம் பார்த்தேன். இந்நிலையில் தற்போது டாக்டர்களும் நம்பிக்கையை இழந்து விட்டனர்.
எனது குழந்தைகள் கஷ்டப்படுவதற்கு பதிலாக இறந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். அது தான் அவர்களுக்கு நிம்மதியை தரும். இதனால் அவர்களை கருணை கொலை செய்யு அனுமதிக்க வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.
அந்த குழந்தைகளின் தாயார் பிரபாவதி கூறுகையில்,
எனது நான்கு மகன்களும் ஐந்து வயது வரை மற்ற குழந்தைகளை போல் சாதாரணமாக தான் இருந்தார்கள். அதன் பின்னர் இந்த நோய் தாக்கியது. தற்போது எனது மகளுக்கு நான்கு வயதாகியுள்ளது. அவருக்கும் இந்த நோய் வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது என்றார்.