புலிகளின் விமானப் படை..பார்வையிடும் பிரபாகரன்!-படங்கள்
கொழும்பு: ஒரு முழுமையான, வலுவான ராணுவ அமைப்பாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் விமானப் படை உருவாக்கத்தை புலிகளின் தலைவர் பிரபாகரன், நேரில் பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிங்கள மீடியா இப்போது வெளியிட்டு வருகிறது.இந்தப் புகைப்படங்களை புலிகளின் ராணுவ கோப்புகளிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ளது இலங்கை ராணுவம்.
படத்தில் உள்ள இரு விமானங்களும் எரித்தீரியா நாட்டில் வாங்கப்பட்டவை. சிலின் 143 ரகத்தைச் சேர்ந்தவை. தெற்கு இலங்கை மீது 7 முறை பறந்து, குறித்த நிலைகளை வெற்றிகரமாகத் தாக்கிவிட்டு திரும்பியவை.
இந்த விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த நிறம், பின்னர் புலிகளின் ராணுவ நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதேபோல புலிகளின் தேவைக்கேற்ப பல மாற்றங்கள் இந்த விமானங்களில் செய்யப்பட்டன. குறிப்பாக அவை அனைத்தையும் முடிந்தவரை குறைந்த எடை கொண்டவையாக மாற்றச் சொன்னாராம் பிரபாகரன்.
உலகில் முதன் முதலில் விமானப் படை ஒன்றை சொந்தமாக உருவாக்கிய இயக்கம் என்ற பெருமை விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உண்டு.
விமானங்கள் பறப்பதை மகிழ்ச்சியுடன் பார்வையிடும் பிரபாகரனுடன் புலிகளின் உளவுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான், மறைந்த அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் மற்றும் தளபதிகள் கர்னல் ஜெயம், கர்னல் விதுஷா, காஸ்ட்ரோ மற்றும் கர்னல் தீபன் ஆகியோரும் இந்தப் படங்களில் உள்ளனர்.
புலிகளுக்குச் சொந்தமான 12 விமானங்கள் இப்போது எரித்தீரியா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக சமீபத்தில் இலங்கை நாளேடு செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்தப் படங்கள் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.