ஆப்கானில் 5 கார் குண்டுகள் வெடித்து 41 பேர் பலி
காந்தகார்: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில் ஒரு கட்டிடத்தில் நிறுத்தப்பட்ட ஐந்து கார் குண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்ததில் 41 பேர் உடல் சிதறி பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகிலிருந்த 40 கடைகளும் முழுவதுமாக சேதமடைந்தன.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் காந்தகார். பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு அருகில் உள்ளது. நேற்று இரவு இந்த நகரில் பாகிஸ்தான் என்ஜினியர்கள் அதிகம் வேலை பார்க்கும் ஜப்பான் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில், ஒரே சமயத்தில் ஐந்து கார் குண்டுகள் வெடித்தன.
இதில் அந்த கட்டிடம் சின்னா பின்னமானது. அருகிலிருந்த திருமண மண்டபமும் பலத்த சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சுமார் 40 கடைகளும் இந்த குண்டுவெடிப்பால் சுக்கு நூறாகியது.
இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 60 பேர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் காந்தகார் நகரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது தான் என கூறப்படுகிறது. மேலும், தீவிரவாதிகள் ஜப்பான் நிறுவனத்தை குறி வைத்து தாக்கியது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தகார் மாகாண போலீஸ் துணை தலைமை கமாண்டர் முகமது ஷெர் ஷா கூறுகையில், குழந்தைகளையும், பெண்களையும் கொன்ற அவர்கள் மனிதர்கள் அல்ல. மிருகங்கள். அவர்களை ஒழிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications