ஜின்னா புத்தகம்-பாக். செல்லும் ஜஸ்வந்த் சிங்

ரம்ஜான் முடிந்த பின்னர் ஜஸ்வந்த்தின் பாகிஸ்தான் பயணம் அமையும் எனத் தெரிகிறது. அந்த பயணத்தின்போது ஜின்னா குறித்து தான் எழுதிய, தன்னை பாஜகவிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக அமைந்த சர்ச்சைக்கிடமான Jinnah: India, Partition, Independence நூலை பாகிஸ்தானில் வெளியிடுவார் ஜஸ்வந்த் சிங் எனத் தெரிகிறது.
இதுகுறித்து நூலின் பதிப்பாளரான ரூபா அன்ட் கம்பெனியின் தலைவர் ஆர்.கே.மெஹ்ரா கூறுகையில், இன்னும் சில நாட்களில் ஜின்னா நூலின் அறிமுகப் படலம் பாகிஸ்தானில் தொடங்கும். பாகிஸ்தானில் உள்ள எங்களது சக பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு, புத்தகத் தொடக்க விழாவுக்கு தேதி குறிக்குமாறு கேட்டுள்ளோம். ரம்ஜானுக்குப் பின்னர் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜஸ்வந்த் சிங் போவாரா என்ற கேள்விக்கு, ஜஸ்வந்த் சிங்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். அவர் இல்லாமல் எப்படி தொடக்க விழா நடைபெறும்? என்றார் அவர்.
சமாஜ்வாடிக்கு அழைக்கும் அமர்சிங்:
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங், சமாஜ்வாடி கட்சியில் சேர வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமர்சிங் டிவி சேனல்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜஸ்வந்த் சிங்குடன் நான் பேசியுள்ளேன். நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று கூறினேன். சமாஜ்வாடிக்கு வாருங்கள் என்று ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுவதற்கு நான் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை.
இருந்தாலும், சமாஜ்வாடி கட்சி என்ற தளத்திலிருந்து கொண்டு அவரது அரசியல் தொடர அழைப்பு விடுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நான் அழைப்பு விடுத்ததும், முதலில் உங்களது உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நலம் பெற்றுத் திரும்பியவுடன் அதுகுறித்துப் பேசலாம் என்றார் அமர் சிங்.
அமர்சிங், தற்போது சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறிச்சோடிய பாஜக ஆபிஸ்..
இந் நிலையில் கட்சியில் பெரும் கலாட்டா நடந்து வருவதால் கடந்த 3 நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு எந்த முக்கியத் தலைவரும் வரவில்லை. தொண்டர்களும் வரவில்லை. இதனால் அலுவலகமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications