கேப்டன், மனைவி கொலை- நெல்லைக் கும்பலுக்கு தொடர்பா?
நெல்லை: சென்னையில் ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவி கொலையில் நெல்லை கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த பனையூர் 11வது அவென்யூவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் இளங்கோவன். அவரது மனைவி ரமணி ஆகியோர் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜன் என்கிற சண்முகராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளங்கோவனும், கொலையாளி சண்முகராஜனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
எனவே சண்முகராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இளங்கோவன் மற்றும் அவரது மனைவியை சுட்டு கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சண்முகராஜனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கார் டிஎன் 72 ஏஏ0226 நெல்லையில் பதிவு செய்யப்பட்டதாகும். எனவே இளங்கோவன் ரமணி கொலையில் நெல்லையை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் கார் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதுதவிர நெல்லையை சேர்ந்த கூலிப்படைக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராஜனுடன் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications