காவலாளிகளை தாக்கி திருநீர்மலை கோயிலில் கொள்ளை முயற்சி
சென்னை: சென்னை அருகே இருக்கும் திருநீர் மலை கோயிலில் காவலாளிகளை தாக்கிவிட்டு மர்ம கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தது. அப்போது எச்சரிக்கை மணி அடித்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது திருநீர்மலை. இங்குள்ள ரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மலை கோயிலுக்கு முனுசாமி மற்றும் ரங்கநாதன் என்ற இரண்டு காவலாளிகள் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 1 மணிக்கு கோயிலுக்குள் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. இதை பார்த்த காவலாளிகள் அவர்களை தூரத்தியடிக்க முயன்றனர்.
ஆனால், அந்த கும்பல் இரண்டு காவலாளிகளையும் இரும்பு கட்டையால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இரண்டு காவலாளிகளும் அதே இடத்தில் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த கும்பல் கோயிலின் உள்பகுதியில் நகைகள் இருக்கும் அறையின் கதவை உடைத்தது. பின்னர் உள்ளே இருந்த பீரோவையும் உடைக்க முயற்சித்தது. அப்போது பீரோவுடன் இணைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணி அபாய சத்தத்தை எழுப்பியது.
தாங்கள் மாட்டி கொள்ளும் அபாய உருவானதை அறிந்த அந்த மர்ம கும்பல் கோயிலில் இருந்து ஓட்டம் பிடித்தது. பின்னர் மலை பாதை வழியாக வேறு இடத்துக்கு தப்பி சென்றது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இணை கமிஷனர் வரதராஜூலு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிபட்ட காவலாளிகள் இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.