சென்னை 'டைசல் பயோ பார்க்'-2வது கட்டப் பணிகள் தொடக்கம்
சென்னை: சென்னை தரமணியில் உள்ள டைசல் பயோ டெக் பூங்காவின் 2வது கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் டைடல் பூங்கா ஆகியவை இணைந்து டைசல் பயோடெக் பூங்கா திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.
தற்போது இந்தப் பூங்காவின் 2வது கட்டப் பணிகள் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ளன. 6 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் இதற்கான கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டம் 2011ம் ஆண்டில் முடிவடையும். 1500 விஞ்ஞானிகளுக்கு இதில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திட்ட வடிவமைப்புப் பணிகள் டாமசக் என்ஜீனியரிங் கன்சார்சியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சிவில் கான்டிராக்டர் முடிவு செய்யப்படுவார்.
இந்த வளாகத்தில் அமையவுள்ள ஒவ்வொரு ஆய்வு நிறுவனத்திற்கும் தலா 2400 முதல் 30,000 சதுர அடி வரையிலான இடம் அளிக்கப்படும்.
முதலீடு செய்யப்படும் ரூ. 120 கோடியில், டிட்கோ நிறுவனம் ரூ. 20 கோடியையும், டைடல் பூங்கா ரூ. 40 கோடியையும் முதலீடு செய்யவுள்ளன. இதுதவிர மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் நிறுவனம் ரூ. 20 கோடியை முதலீடு செய்யவுள்ளது. மீதமுள்ள ரூ 40 கோடி நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெறப்படும்.
டைசல் பூங்காவின் முதல் கட்டப் பணிகள் ரூ. 54.76 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமைநதுள்ளது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் இது உருவாக்கப்பட்டது.
இங்கு மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகம், ஹக்லின் ரிசர்ச், எச்எல்எல் ஹெல்த்கேர், ஈஐடி பாரி, எஸ்.ஜி.எஸ் இந்தியா ஆகிய முக்கிய நிறுவனங்களின் ஆய்வுக் கூடங்கள் அமைந்துள்ளன.
2வது கட்டப் பணிகள் முடிவடைந்ததும், ரூ. 70 கோடி மதிப்பீட்டில் 3வது கட்ட டைசல் பயோடெக் பூங்கா பணிகள் தொடங்கவுள்ளன.
3 பூங்காக்களும் அமைக்கப்பட்டவுடன், இது, 11 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணி வளாகமாக மாறும்.