தமிழகத்தில் ஸ்வைன் தடுக்கப்பட்டுள்ளது-அரசு
நாகப்பட்டினம்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, அவசரகால ஊர்திகள் (108) வழங்கும் விழாவில் கலந்து கொண்டு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது...
தமிழகத்தில், பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதல் இருக்குமோ? என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 8,525 ஆகும்.
தமிழகத்தில் 267 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில், 211 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 56 பேர் மட்டுமே பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் 3 பேர் மட்டுமே.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுக்கப்பட்டுள்ளது.
பாளை மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவு
இதற்கிடையே, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனிபிரிவு தொடக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் கோவையில் பன்றி காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தனிபிரிவு துவக்கும்
பணி தீவிரமாக நடந்தது.
தொற்று நோய் பிரிவு அடுத்து உள்ள கட்டிடத்தில் பன்றி காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. இங்கு தற்போது 5 படுக்கைகளும், மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் கூறுகையில், அரசு அறிவித்தபடி நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று முதல் பன்றி காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். பன்றி காய்ச்சலை தடுக்க போதுமான நடவடிக்கைகளை மருத்துவ துறையினர் எடுத்து வருகின்றனர் என்றார்.
வேளாங்கண்ணி விழாவில் ஸ்வைன் சோதனை...
வேளாங்கண்ணி திருவிழாவின்போது பக்தர்கள் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சிறப்பு மருத்துவக் குழுக்கள் வேளாங்கண்ணியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் இங்கு அனுப்பி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் சுகாதாரத் துறை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
சென்னையில்...
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.