மின்னணு எந்திரம்: டெல்லியில் பாமக குழு ஆய்வு - செப். 7ல் நிரூபிக்கிறார்கள்
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்காக பாமக குழு டெல்லி வந்துள்ளது. நேற்று தேர்தல் ஆணையர்கள் முன்பு தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். செப்டம்பர் 7ம் தேதி மோசடி செய்ய முடியுமா என்பதை நிரூபிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்துள்ளது.
மின்னணு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும். எனவே அதை பயன்படுத்தக் கூடாது என்று பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 27ம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகி தனது புகாரை நிரூபிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான குழு டெல்லி வந்தது. இக்குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், புனே நகரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் விஜயேந்திர குப்தா, பாமக வக்கீல் கே.பாலு, உச்சநீதிமன்ற வக்கீல் துகார் ராவ் ஆகியோர் இதில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களது வருகையையொட்டி தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம் ஜி.கே.மணி மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரிக்கும் இரண்டு இந்திய நிறுவனங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
எனவே தேர்தல் நேரத்தில் எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்து. மின்னணு எந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளர் தனது வாக்கு யாருக்கு சென்றது என்பதை உறுதி செய்யும் வசதி இல்லை.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் தகவல் சேமிப்பு சிப்-புகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுபவை. அதில் பல முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய சுதந்திரமான குழு ஒன்றை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
அக்குழுவில் தொழில்நுட்ப நிபுணர்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை முழுமையாக ஆய்வு செய்யவும், சுதந்திரமான குழு முன்பு முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்கவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதைப் பெற்றுக் கொண்ட நவீன் சாவ்லா, தொழில்நுட்ப ரீதியாக என்ன மாதிரியாக முறைகேடுகள் செய்ய முடியும் என்பது குறித்து தனியாக இன்னொரு மனு அளிக்குமாறு பாமகவினரைக் கேட்டுக் கொண்டாராம்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் எந்திரங்களைப் பிரித்து ஆய்வு செய்யவும் அனுமதிப்பதாக அவர் வாய்ப்பளித்தார்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழுவினர் உதவியுடன் பாமகவினர், வாக்குப் பதிவு எந்திரங்களை பிரித்து ஆய்வு செய்தனர்.
மேலும் விரிவான ஆய்வை மேற்கொள்ள செப்டம்பர் 7ம் தேதி இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. அன்று, சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் நிபுணர்களின் உதவியுடன் பாமக குழு வாக்குப் பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யவுள்ளது.
இதையடுத்து மீண்டும் ஒரு முறை முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், பாமகவினர் செயல் விளக்கம் செய்து காட்டவுள்ளனராம்.