2 வாரத்திற்குள் 50,000 தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் - இலங்கை
கொழும்பு: இன்னும் 2 வாரத்திற்குள் 50 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் தமிழர்கள் இன்னும் 2 வாரத்தில் மறு குடியமர்த்தப்படுவார்கள்.
போர் நடந்த பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியைப் பொறுத்து, டிசம்பர் மாதத்திற்குள் அனைவரையும முகாம்களிலிருந்து சொந்த ஊர்களில் குடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என்றனர்.
இதற்கிடையே, மறு குடியேற்றம் தொடர்பாக சொன்ன சொல்லை ராஜபக்சே அரசு காப்பாற்ற வேண்டும் என்று இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவு விவகார செய்தித் தொடர்பாளர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டிசம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தி விடுவோம் என ஏற்கனவே இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. அதை அது நிறைவேற்ற வேண்டும்.
தொடர்ந்து அப்பாவி மக்களை முகாம்களிலேயே தங்க வைத்திருந்தால் அது வெறுப்பு விதையைத் தூவுவதற்குச் சமம். இதனால் வரும் ஆண்டுகளில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. கடும் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி கிடைத்துள்ள நிலையில், மீண்டும் போருக்குப் போனால் நாடு மீளுவது கஷ்டம்.
போர் பாதித்த பகுதிகளிலிருந்த மீட்கப்பட்ட அப்பாவி மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களிடம் செல்ல ஐ.நா. பணியாளர்களுக்கும், தொண்டு நிறுவனக் குழுக்களுக்கும் தடையில்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும்.
அகதிகளை பார்த்துப் பேசவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் தொண்டு நிறுவனக் குழுக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பருவ மழைக் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதற்குள் முகாமில் தங்கியுள்ளவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டியது அவசியம், அவசரமாகும் என்றார்.
தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும்-அமெரிக்கா:
அமெரிக்க இணை அமைச்சர் எரிக் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமான முறையில் நடமாடவும், முகாம்களை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
இதற்கிடையே, கண்ணிவெடிகளை அகற்றும் பணியைப் பொறுத்தே அகதிகளை மீண்டும் சொந்த ஊர்களில் குடியமர்த்துவது அமையும் என்று ராஜபக்சேவின் தம்பியும், மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் முதலிலிருந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
மேலும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக கூடுதல் படையினரை அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவதாக ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வடக்கு யாழ்ப்பாணத்தில், 13000 ஹெக்டேர் நிலத்தில் அடுத்த ஆண்டு மீண்டும் விவசாயப் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த வயல்கள் கடந்த 10 ஆண்டுகளாக தரிசாக கிடப்பவை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.