For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமிஷனர்தான் தடியடி நடத்த உத்தரவிட்டார் - மாஜி கூடுதல் ஆணையர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது தடியடி நடத்தச் சொன்னது போலீஸ் கமிஷனர்தான் என்று முன்னாள் கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வரலாறு காணாத வகையில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர்.

அன்றைய தினமே சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக கோர்ட் அவமதிப்பு வழக்கை மேற்கொண்டது.

அரசு உத்தரவாத அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் சார்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணி ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்யவேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து இரு போலீஸ் அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட் இரு அதிகாரிகளையும் சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் தரப்பில் வக்கீல்கள் சங்கத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் ஆர்.வைகை, ஏ.கே.விஸ்வநாதன் சார்பில் வக்கீல் வி.செல்வராஜ், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் ராஜாகலிபுல்லா, சி.பி.ஐ. சார்பில் வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

ஏ.கே.விஸ்வநாதன் இந்த வழக்கிற்கு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கோர்ட்டுக்கு வந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீஸ் கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் எனக்கு உத்தரவிட்டார். எனவே காலையில் போலீஸ் படையுடன் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டேன். கோர்ட்டுக்குள் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டார்.

தாக்குதல் செய்த வக்கீல்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வருவதாகவும், அவர்களை கைது செய்யுமாறும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

எனவே மீண்டும் நான் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தேன். அங்கு வக்கீல்களை கைது செய்ய தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகவும், உயர்நீதிமன்றத்திற்கு சென்று அவர்களை கைது செய்யவேண்டும் என்றும் கமிஷனர் எனக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி வக்கீல்களை கைது செய்ததால் பதற்றம் நிலவியது. ஆகையால் போலீஸ் படையை வாபஸ் பெறவேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டேன். ஆனால் அங்கே போலீஸ் படையுடன் இருந்து, போலீஸ் நிலையத்தை பாதுகாக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார். எனவே நானும், இணை கமிஷனர்கள் ராமசுப்பிரமணி, சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே இருந்தோம்.

கமிஷனர் மாலை 4 மணிக்கே எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார். அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் பிரச்சினை நடந்து கொண்டிருந்தது. கோபம் கொண்ட வக்கீல்களை கமிஷனர் உத்தரவின் பேரில் விரட்டினோம்.

இதன்பிறகு மீண்டும் போலீஸ் படையை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தேன். ஆனால் கமிஷனர் இதை ஏற்கவில்லை. மாலை 4.30 மணிக்கு கூடுதலான போலீஸ் படையுடன் கமிஷனர் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் வந்தார். அவர் உத்தரவின் பேரில் கண்ணீர்புகை வீசப்பட்டது. தடியடி நடத்தப்பட்டது.

மாலை 5.15 மணிக்கு எல்லா போலீசாரையும் தீயணைப்பு போலீஸ் நிலையம் அருகே வருமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அங்கு போலீசார் வந்தபிறகு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் எரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்த வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டார்.

அன்று நடந்த முழு தடியடி சம்பவத்தையும், நடவடிக்கையையும் கமிஷனர் தலைமையேற்று நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், நேற்று, வக்கீல்கள்-போலீசார் மோதல் குறித்த சம்பவம் பற்றி இதுவரை எந்த அளவில் விசாரணை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய சி.பி.ஐ.யின் அறிக்கையை சீல் வைத்த கவரில் வைத்து வக்கீல் சந்திரசேகரன் தாக்கல் செய்தார்.

அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் செல்போனில் பேசிய விவரங்களை தனக்கு ஒருவர் கொடுத்ததாகவும், அதை கோர்ட்டில் தாக்கல் செய்வதாகவும் வக்கீல் ஆர்.வைகை தெரிவித்து சமர்ப்பித்தார்.

ஏற்கனவே கமிஷனர், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன்பும், விசாரணை கமிஷன் முன்பும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தாக்குதல் நடந்த சமயத்தில் கமிஷனர் எங்கிருந்தார் என்பது குறிப்பிடவில்லை என்று ஆர்.வைகை தெரிவித்தார்.

4 மணிக்கு எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு வந்த கமிஷனர் மாலை 4.40 மணிக்கு குடும்பநல கோர்ட்டு அருகே கமிஷனர் வந்து நின்றார் என்று அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார்.

தற்போது ராதாகிருஷ்ணன் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ளார் என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதால் சாட்சியத்தை கலைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் வற்புறுத்தி வாதாடினார்.

எனவே அவர் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் அதிகாரிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், வழக்கு விவகாரங்களில் ராதாகிருஷ்ணன் தலையிடக்கூடாது என்றும் அவர் வற்புறுத்தி வாதாடினார்.

அட்வகேட் ஜெனரல் வாதாடுகையில், ஏ.கே.விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில் முழு காரணம் போலீஸ் கமிஷனர் தான் என்று கூறி மனுதாக்கல் செய்துள்ளார் என்றும், ஒவ்வொருவரும் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

வக்கீல்கள் விவாதத்திற்கு பிறகு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். மேலும் 7-ம் தேதிக்குள் டி.ஜி.பி. கே.பி.ஜெயின், முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X