திண்டுக்கல் டாக்டர் கொலை-குற்றவாளி சரண்
கோவை: திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான சபீர் முகமது கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல டாக்டர் பாஸ்கரன்(70) கடந்த ஏப்பரல் மாதம் 30ம் தேதி வாக்கிங் சென்ற போது கடத்தி செல்லப்பட்டார். ரூ. 5 கோடி கேட்டு மிரட்டிய மர்ம கும்பல் பணம் கிடைக்காததால் அவரை கொலை செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எஸ்.பி.அருண் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் முன்னாள் ராணுவ வீரர், எம்பிஏ மாணவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
ஆனால், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பழநி ஆயக்குடியைச் சேர்ந்த சபீர் முகமது (23) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை நீதிபதி ஜோதி வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.