இலங்கையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதை கண்டித்து ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், செப்டம்பர் 3ம் தேதி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.