புதிய ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்தது
சென்னை: ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தின் (2009) கீழ், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கீழ்கண்ட விதிகளை உருவாக்கி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டானது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- இந்த போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளின் உரிமையாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறையினரிடம், போட்டி தொடங்கும் 3 மணி நேரத்துக்கு முன்னதாக, காளைகளை காண்பித்து அனுமதி பெறவேண்டும்.
- அந்த காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் பரிசோதனை செய்து, அதற்கு அதிக சக்தியையும், ஊக்கத்தையும் தரும் எந்தவிதமான மருந்துகளோ, பானங்களோ தரப்படவில்லை என்று சான்றளிக்க வேண்டும். காளைகளுக்கு, அதுபோன்ற மருந்துகளோ, பானங்களோ தரப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கருதுவார்களேயானால், அந்த காளைகளை போட்டியில் பங்கேற்கவிடாமல் விதிக்கலாம். இந்த விஷயத்தில், கால்நடை பராமரிப்புத்துறையினர் எடுக்கும் முடிவே இறுதியானது.
- போட்டியை நடத்தும் அமைப்பாளர், ஆடுகளத்தில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்படும் வகையில் ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆட்டத்தில் ஒரு முறை பங்கேற்ற காளையை, மீண்டும் ஒரு முறை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.
- போட்டியில் பங்கேற்போருக்கும், காளைகளுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருப்பதற்காக, போட்டி நடைபெறும் களமானது, எந்தவித மேடு, பள்ளமும் இன்றி சீராக அமைக்கப்பட்டுள்ளதா என்பதனை மாவட்ட கலெக்டர் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications