பாஜகவை ஜின்னா பிரித்துவிட்டார்-கருணாநிதி

ஜின்னா விவகாரத்தால் பாஜக கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஆளாளுக்கு சரமாரியாக கட்சித் தலைமையை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது பாஜகவுக்கு நல்லதல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதி தனது ஸ்டைலில் நச்சென்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக குழப்பம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்தியப் பிரிவினைக்கும், பாகிஸ்தான் உருவானதற்கும் ஜின்னா காரணமோ என்னவோ, ஆனால் இப்போது பாஜகவில் பிரிவினை ஏற்பட ஜின்னா காரணமாகி விட்டார் என்றார் கருணாநிதி.
இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களின் மோசமான நிலை குறித்த இன்னொரு கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், இந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்துமாறு மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடனும் எடுத்துச் சென்றுள்ளோம்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். தனது உறுதிமொழியை அவர் அமல்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்ற கேள்விக்கு, அவை இலங்கைத் தமிழர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications