கருப்புப் பணம் மீட்பு: டிசம்பரில் இந்தியா - சுவிஸ் பேச்சு
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை பெறுவது தொடர்பாக மத்திய அரசு, டிசம்பர் மாதம், சுவிட்சர்லாந்து நாட்டு அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சக தரப்பில் கூறுகையில், இந்திய அதிகாரிகள் டிசம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகளுடன் பேசவுள்ளனர். இது முதல் சுற்றுப் பேச்சுதான். கருப்புப் பணம் குறித்த விவரங்களைப் பெறுவதற்கான சட்ட சாத்தியக் கூறுகள் குறித்து இதில் பேசப்படவுள்ளது.
இதற்காக சுவிட்சர்லாந்து நாட்டு அரசுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்ந்தம் ஏற்படுத்தப்படும். சர்வதேச அளவில் உள்ள பொருளாதார ஒப்பந்தம் மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக உலக நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதைப் போன்றது இது.
இந்த நடவடிக்கைகள் தொடரும். இதன் மூலமாக கருப்புப் பணம் குறித்த விவரங்களை இந்தியாவால் பெற முடியும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தனர்.
கருப்புப் பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை சமீபத்தில் இந்திய அரசு கோரியிருந்தது. ஆனால் இதை சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.