வெங்கையாவை சந்திக்காத வசுந்தரா - மகனை அனுப்பினார்
டெல்லி: வசுந்தரா ராஜேவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இன்று வெங்கையா நாயுடுவை சந்திப்பதாக இருந்த அவர் அதற்குப் பதில் தனது மகன் துஷ்யந்த்தை அனுப்பி வைத்து பாஜக தலைமையை கடுப்படித்துள்ளார்.
இன்று டெல்லியில் வெங்கையாவை சந்திப்பதாக இருந்தார் வசுந்தரா. இதற்காக வெங்கையா நாயுடுவும் காத்திருந்தார். ஆனால் நேற்றே டெல்லி வந்து விட்ட வசுந்தரா, கடைசி நேரத்தில் தான் வராமல் தனது மகன் துஷ்யந்த்தை அனுப்பி வைத்தார்.
ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜே விலக வேண்டும் என கட்சித் தலைமை கட்டளையிட்டுள்ளது. அவருக்கு 3 நாள் அவகாசத்தையும் கொடுத்திருந்தது. ஆனால் ராஜே அசைந்து கொடுப்பதாக இல்லை.
இந்த நிலையில்தான் இன்று அவர் வெங்கையாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவர் போகவில்லை. அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ராஜே சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும், இன்றைக்குள் தனது ராஜினாமாவை ராஜே சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.