நடுக்கடலில் மீனவர்கள் மீது குண்டுவீச்சு-ரூ.12 லட்சம் பொருட்கள் கொள்ளை
கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் கேரளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த சுதேஷ், மரியஜார்ஜ், ராஜன், பாஸ்கர், கேரளத்தை சேர்ந்த மனோஜ், ரத்தினகரன், ராமேசுவரத்தை சேர்ந்த தங்கதுரை ஆகியோர் மீன் பிடித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிடித்த மீன்களை கேரளத்தில் விற்பனை செய்வதற்காகச் சென்றனர். அங்கு மீன்களுக்கு சரியான விலை கிடைக்காததால், குளச்சலில் விற்க மீன்களை படகில் கொண்டு வந்தனர்.
இப் படகு குளச்சலில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் நேற்று வந்து கொண்டிருந்த போது பழுதடைந்தது.
அப்போது அங்கு 7 கட்டுமரங்களில் 40 பேர் வந்தனர். அவர்கள் பழுதடைந்து நின்ற படகின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். வாள், சூலாயுதம், கம்பு போன்றவற்றால் தாக்கினர்.
உடனே, படகில் இருந்த சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் கடலில் குதித்தனர். இதில் சுரேஷ் படகில் இருந்த பாஸ்கர், ராஜன், ஜான்போஸ்கோ ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய கும்பல், பின்னர் படகில் இருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள வலைகள், மீன்கள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். பின்னர் விசைப்படகில் இருந்த ரூ. 2 லட்சம் பொருமான மீன்கள், ஜிபிஎஸ், வயர்லஸ் போன்ற கருவிகளையும் மர்மக்கும்பல் தங்களது படகி்ல் ஏற்றினர். பின்னர் அக்கும்பல் போய் விட்டது.
காயமடைந்த மீனவர்கள் குளச்சல் திரும்பி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கீழகடியபட்டிணத்தை சேர்ந்த ஆண்டனி, அமலன் உள்பட 5 பேர் மீது குளச்சல் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் செய்தார். தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications