நான் தி.மு.க.வுக்கு ஆதரவான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.: எஸ்.வி.சேகர்
மதுரை: என்னை அதிமுகவிலிருந்து நீக்கியதை சபாநாயகருக்கும், எனக்கும் அதிமுக தலைமை இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே நானும் அதிமுக உறுப்பினர்தான். சட்டசபையில் அதிமுக-2 என்ற பெயரில் நான் செயல்படுவேன் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்.
நேற்று மதுரை வந்த எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார். அவருடன் இயக்குநர் சேரனும் உடன் வந்திருந்தார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில்,
மதுரை சூரியாநகரில் உள்ள முத்தப்பசுவாமி கோவிலில் சுகபிரம்ம மகரிஷி சன்னதியை கட்டியிருக்கிறேன். அதற்காக மதுரை வந்த நான், அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அ.தி.மு.க. தலைமை சரியான முறையை பின்பற்றவில்லை. அங்கு உரிய மரியாதை இல்லை.
தென் மாநிலங்களில் இனி திமுகதான்...
நடந்து முடிந்த 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை மு.க.அழகிரி பெற்றுத்தந்துள்ளார்.
தேர்தல் பணியை முறைப்படுத்தி அவர் செயலாற்றிய விதம் தென் மாவட்டத்தில் என்றைக்கும் தி.மு.க. தான் என்பதை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அமைச்சரான பின்பு இப்போது அவரை சந்தித்திருக்கிறேன்.
தேர்தல் என்றாலே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சியினர் போட்டியிடுகின்றனர். அதற்காகத்தான் தி.மு.க.வை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.
ஆகவே ஆளுங்கட்சியினர் செய்கின்ற நல்ல திட்டங்களை பாராட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசின் திட்டங்களை குறைகூறிக்கொண்டு இருக்கக்கூடாது.
என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக பத்திரிகைகளில்தான் தெரிவித்துள்ளனர். ஆனால் எனக்கோ, சட்டமன்ற சபாநாயகருக்கோ இது குறித்து கட்சித்தலைமை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
திமுகவுக்கு ஆதரவான அதிமுக எம்.எல்.ஏ...
எனவே தி.மு.க.வுக்கு ஆதரவான அ.தி.மு.க. உறுப்பினராக நான் செயல்படுவேன். நான் இப்போதும் அ.தி.மு.க. உறுப்பினர்தான். எனவே அ.தி.மு.க.-2' உறுப்பினர் என என்னை அங்கீகரிக்க சபாநாயகரை கேட்டுக்கொள்வேன். அதற்கு சபாநாயகர் அனுமதிப்பார் என்று கருதுகிறேன்.
தி.மு.க வில் இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.
தி.மு.க. அரசின் துணையோடு தொகுதி மக்களுக்கு தேனையான நல திட்ட உதவிகளை மேற்கொள்வேன்.
நான் இப்போது அ.தி.மு.க.வை விமர்சித்தால் ஏதோ என்னை வெளியேற்றியதால் நான் கூறுவதாக சொல்வார்கள். ஒரு கட்சி என்றால் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் எப்போதும் ஒரு உறவு இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் தொண்டர்கள் கொடநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
அங்கு சென்றாலும் கதவு திறக்குமா? என்பது தெரியாது. ஆனால் தமிழக முதல்-அமைச்சரை தொண்டர்கள் எப்போதும் சந்திக்க முடியும் என்றார் சேகர்.
அழகிரியை சந்திக்க வந்தது குறித்து சேரன் கூறுகையில், நான் மதுரைக்காரன். எனவேதான் மரியாதை நிமித்தமாக அழகிரியை சந்தித்தேன் என்றார்.