இனப் பிரச்சினைக்குத் தீர்வு - ராஜபக்சேவுக்கு உதவத் தயார் தமிழ் தேசிய கூட்டமைப்பு
இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லியாம் பொக்ஸ் கொழும்பு வந்திருந்தார். அதிபர் ராஜபக்சே மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாணத்துக்கும் அவர் சென்றார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் சம்பந்தன் பேசுகையில்,
அதிபர் ராஜபக்சே இனப்பிரச்சினை தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் முன்நகர்வதற்கு எமது உதவியை லியாம் பொக்ஸ் கோரினார். அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் எனப் பதிலளித்துள்ளோம்.
நாட்டைப் பிரிக்காமல் அனைத்து சமூகங்களும் மதிப்புடன் வாழத்தக்க அடிப்படைத் தீர்வு ஒன்று இருக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அதிபருக்கு உதவி செய்ய ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவியாக நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் லியாம் பொக்ஸ் ஈடுபட்டார். இதனை அடுத்து இரு கட்சிகளுக்கும் இடையில் லியாம் பொக்ஸ் உடன்படிக்கை ஒன்றும் எற்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அது தோல்வியில் முடிவடைந்தது.
இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ராஜபக்சே மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஆதரவை இங்கிலாந்து அரசு வழங்கும் என்று லியாம் பொக்ஸ் தெரிவித்தார் என தெரிவித்துள்ளார் சம்பந்தன்.