ஒரு நம்பர் ஆன் லைன் லாட்டரி மோசடி - லாட்டரி அதிபர் சரண்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஒரு நம்பர் ஆன் லைன் லாட்டரி சூதாட்டம் நடத்தியது தொடர்பாக அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் சங்கத் தலைவரும், மார்ட்டின் குழுமத் தலைவருமான உஸ்மான் பயஸ் உள்ளிட்ட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருமங்கலம் ஆலம்பட்டி பாய்ஸ் டவுன் எதிரில் ஒரு வீட்டில் ஆன்லைன் ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார், 16 பேரை கைது செய்தனர். மேலும் அதை நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த ஆன்லைன் லாட்டரி நிறுவனத்தை நடத்தி வந்ததாக கூறப்படும் உஸ்மான் பயஸ், பழனி என்ற பழனியப்பன், அண்ணாமலை ராமு ஆகியோர் கடந்த ஆஸ்ட் 18 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர்.
இதனையடுத்து, திருமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெய்சிங் முன்னிலையில் சென்னை உஸ்மான் பயஸ், பழனி என்ற பழனியப்பன், அண்ணாமலை ராமு ஆகிய மூன்று பேரும் சரணடைந்தனர்.
அவர்களை திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு தினசரி நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீன் மற்றும் ரூ. 25 லட்சம் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கி அவர்களை நீதிபதி விடுவித்தார்.