டைவர்ஸ் கேட்ட 89க்கு பிடிவாரன்ட்-நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக 89 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை குடும்பல நல நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செங்குன்றம் ரோட்டில் வசித்து வருபவர் சிம்சன் கண்ணன்(89). இவருக்கும் இவரது மனைவி ராஜலட்சுமிக்கும் (80) கடந்த 1949ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது சிம்சன் மனைவியுடன் கோபித்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறும் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
திருமணம் நடந்த சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் 89 வயதில் ஒருவர் விவாகரத்து கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சிம்சனின் மனைவி, கணவர் தன்னை பிரிந்துவிட்டால் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 1500 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிம்சன் கண்ணன் அவரது மனைவிக்கு ரூ. 1500 ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், சிம்சன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடு்த்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் சிம்சனை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, 89 வயது சிம்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications