அண்ணா 100: கைதிகளை விடுவிக்க தேசிய லீக்கும் கோரிக்கை
மதுரை: அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னி்ட்டு சிறையில் 8 ஆண்டுகளாக உள்ளவர்களை முதல்வர் கருணாநிதி விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இதேபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக தலைவர் இல.கணேசன் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இதே கோரிக்கையை இந்திய தேசிய லீக்கும் வைத்துள்ளது.
இது குறித்து தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
ஒருவர் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே, குற்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு நன்னடத்தையுடன் வாழ தொடங்கி விடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழக சிறைகளில் இந்த கால அளவுக்கு மேலும் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் குடும்பத்தில் திருமண வயதில் மகனும் மகளும் உள்ளனர்.
எனவே, 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களையும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, விடுதலையில் பாரபட்சம் காட்டாமல் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விடுதலை செய்ய முதலமைச்சர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.