3 நாட்களாக இறந்த இறந்த கணவர் உடலுடன் இருந்த பெண்
நெல்லை: கணவர் இறந்ததை வெளியில் சொல்லாமல் அவரது உடலுடன் 3 நாட்களாக தங்கியிருந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை, பாளையங்கோட்டை அருகேயுள்ள தியாகராய நகரை அடுத்த சரதா நகர் 17வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி லட்சுமியம்மாள்.
இவர்களுக்கு சுப்புராஜ் என்ற மகனும், நாச்சியார் என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்புராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் நாச்சியார் சென்னையில் வசிக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் இங்கு தனியாக வசித்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். இந்த தகவலை லட்சுமியம்மாள் வெளியே யாருக்கும் தெரிவிக்காமல் கதவை பூட்டிக் கொண்டு கணவர் உடலுடன் வீட்டிற்குள் இருந்து கொண்டார். மேலும் அவரது உடலுக்கு பவுடர் பூசி, உணவு ஊட்ட முயன்றுள்ளார்.
இன்று காலை வீ்ட்டிற்குள் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி சேரில் அமர்ந்தபடி பிணமாக இருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், கதவை திறக்குமாறு லட்சுமியம்மாளிடம் கூறினர். ஆனால் அவர் திறக்க மறுத்து விட்டார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் வந்து கதவைத் தட்டிய பிறகே, லட்சுமியம்மாள் கதவை திறந்தார். தனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், மகள் வந்தபிறகுதான் கதவை திறக்க வேண்டும் என்று இருந்ததாகவும் கூறினார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டார்.
போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.