'தேசிய கீதம்' பட பாணியில் ரெட்டி கடத்தப்பட்டாரா?
ஹைதராபாத்: சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தேசிய கீதம் என்று ஒரு படம் வந்தது. சேரன் இயக்கிய இந்தப் படத்தின் கதையில் ஒரு முக்கிய காட்சி முதல்வரைக் கடத்துவது.
ஆட்சி மீது கோபம் கொண்ட தீவிர இளைஞர்கள் நான்கு பர் சரியாகத் திட்டமிட்டு, தேக்கடிக்கு சுற்றுலா வரும் 'முதல்வர் நாசரை' கடத்திக் கொண்டு போய் கிராமத்தில் தங்களுடனே தங்க வைத்து தாங்கள் படும் அத்தனை சிரமங்களையும் முதல்வரையும் அனுபவிக்க வைப்பார்கள்.
அவரை போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் கண்டுபிடிக்கவே முடியாது.
ஆந்திரா நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள ஒரு மாநிலம். குறிப்பாக மலைப் பகுதிகளில் போலீசாரே போகப் பயப்படும் அளவுக்கு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அதிலும் தற்போது முதல்வர் ரெட்டி மாயமாகியுள்ள நல்லமலை காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம். இந்தப பகுதியில்தான் இப்போது ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது.
ஒரு சமயம் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்துவிட்டோம் என்றும், மற்றொருபுறம் இல்லை, ஹெலிகாப்டர் எப்படி மறைந்தது என்றே தெரியவில்லை என்றும் கூறி வருகிறது காவல்துறையும், ஆந்திர அரசும். இதனால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.
காலை 9.45க்குக் காணாமல் போன ராஜசேகர ரெட்டி 10 மணி நேரமாகியும் இருக்குமிடமும் தெரியவில்லை, என்ன ஆனார் என்ற உண்மையும் தெரிய வரவில்லை.
விபத்து நேர்ந்திருந்தால் அடுத்த சில மணிநேரங்களில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் இவ்வளவு நேரமாகியும் சின்ன தடயம் கூட தெரியவில்லை என்றால் நிச்சயம் இது திட்டமிட்ட கடத்தலாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.
இப்போது 10 ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவை மேலே பறந்தபடிதான் தேடி வருகின்றன. ஒருவேளை ஹெலிகாப்டரை கடத்தி காட்டுக்குள் மரங்களுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்தால், எப்படி கண்டுபிடிக்க முடியும்.. எனவே உள்ளே இறங்கி தேட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர நக்சலைட்டுகள் சினிமா பாணியில் முதல்வரைக் கடத்திக் கொண்டு போய் ஏதேனும் கோரிக்கை வைக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்டுப் பகுதிக்குள் நுழைவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டுதான் அப் பகுதி மலைவாழ் மக்களை உதவிக்கு அழைத்துள்ளனர் ராணுவமும் போலீசாரும்.












Click it and Unblock the Notifications