ஜம்மு-காஷ்மீரில் ஊடுறுவ முயன்ற 5 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில், ஊடுறுவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
வடக்கு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டம் குரெஸ் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சில தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றதை இன்று அதிகாலையில் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் உமா மகேஷ்வர் கூறுகையில், தீவிரவாதிகள் ஒரு குழுவாக ஊடுறுவ முயன்றனர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த படையினர் மீதும் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் சுட்டனர்.
இரு தரப்பிலிருந்தும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பிலிருந்தும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த இன்னொரு சண்டையில், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஒரு வீரர் காயமடைந்தார்.












Click it and Unblock the Notifications