பனையூர் இரட்டை கொலை- இளங்கோவன் மருமகள் ரகசிய வாக்குமூலம்
சென்னை: சென்னை பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கழுத்தில் மூன்று குண்டுகள் பாய்ந்து சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்த முக்கிய சாட்சியான, கொல்லப்பட்ட இளங்கோவனின் மருமகள் வசந்தி, நேற்று நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.
சென்னை நீலாங்கரை அருகே உள்ள பனையூரில் ஓய்வு பெற்ற கேப்டன் இளங்கோவன், மனைவி ரமணி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். இளங்கோவனின் மருமகள் வசந்தி, குழந்தைகள் பிரவீன், பிரியங்கா ஆகியோர் உயிர் பிழைத்தனர்.
இதில் வசந்திக்கு கழுத்தில் மூன்று குண்டுகளும், தோள்பட்டையில் ஒரு குண்டும் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் கொலை குற்றவாளியாக கருதப்படும் சண்முகராஜனை போலீசார் கைது செய்து அடையாறு காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் மர்மமாக இறந்து போனார்.
இதையடுத்து கொலை வழக்கில் பெரும்புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. சண்முகராஜன் இறந்ததை அடுத்து கொலைக்கான காரணத்தை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொலை செய்ய பயன்படுத்தி கள்ளத் துப்பாக்கியை அவர் எங்கிருந்து, யார் மூலம் வாங்கினார் போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
தற்போது இந்த வழக்கில் உண்மைகளை வெளி கொண்டு வர இறந்து போன இளங்கோவன் குடும்பத்தினர் மட்டுமே சாட்சியாக உள்ளனர். அவரது மருமகள் வசந்தியின் கழுத்தில் பாய்ந்த மூன்று குண்டுகளும் அறுவை சிகிச்சை மூலம் சமீபத்தில் அடையார் மலர் மருத்துவமனையில் அகற்றப்பட்டது. ஆனால், தோள்பட்டையில் உள்ள குண்டு இன்னும் நீக்கப்படவில்லை.
கொலை வழக்கில் மர்மம் விலகாத நிலையில் அந்த குடும்பத்தினர் இன்னும் பீதியிலிருந்து மீளவில்லை. மேலும், வித்யாசங்கர், பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் என்பதாலும், அவசர வேலை காரணமாகவும் பிரான்ஸ் செல்ல வேண்டியிருப்பதால் அவர் தற்போது பிரான்ஸ் செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி வசந்தி வீடு திரும்பினார்.
பின்னர் அவர் தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் வாக்குமூலம் தந்தனர். அவர்களது வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வித்யாசங்கர் தனது குடும்பத்தாருடன் பிரான்ஸ் கிளம்பி சென்றார். போலீசாரிடம் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
சண்முகராஜன் மீது மேலும் ஒரு புகார்...
இந்நிலையில் இறந்து போன குற்றவாளி சண்முகராஜன் மீது செகடர்டேரியட் காலனியில் வசிக்கும் கீதா என்பவர் திருட்டு புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள புகாரில்,
சண்முகராஜன் எனது வீட்டில் மரவேலை செய்பவரை போல் வந்து மூன்று நாட்கள் உளவு பார்த்தார். என்னிடம் நைசாக பேசி நான் வெளியே போகும் நேரத்தை தெரிந்து கொண்டார்.
நான் வெளியில் சென்ற பின்னர் வீட்டுக்குள் நுழைந்து பணம், நகைகளை திருடி சென்றுவிட்டார் என்றார்.
இதுகுறித்தும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.