தாலிபான் தலைவர் ஹகிமுல்லா உயிருடன் இல்லை-பாக். மீடியா
இஸ்லாமாபாத்: கடந்தி சில நாட்களுக்கு முன் தாலிபான் தலைவராக அறிவிக்கப்பட்ட ஹகிமுல்லா கான் உயிரோடு இல்லை. அவர் இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அவரைப் போலவே தோற்றமளிக்கும் அவரது தம்பிதான், ஹக்கீமுல்லா போல பேட்டி கொடுத்த நாடகமாடியுள்ளார் என்று பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்திய தாக்குதலில் தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மசூத் பலியானார்.
இதையடுத்து தாலிபான் அமைப்பின் புதிய தலைவராக ஹிகிமுல்லா மசூத் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் சமீபத்தில் பிபிசிக்கு போட்டி கொடுத்திருந்தார். ஆனால், அந்த பேட்டி கொடுத்தது ஹகிமுல்லா அல்ல அது அவரை போல் தோற்றம் கொண்ட சகோதரர் என பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பைதுல்லா இறந்தவுடன் தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் இருந்த ஹகிமுல்லாவின் சகோதரரை உடனடியாக அழைத்து வந்து அவரை ஹகிமுல்லாவாக நடிக்க வைத்து வருகின்றனர்.
அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை ஏமாற்றுவதற்காகவும், தங்கள் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பது போல் வெளிக்காட்டி கொள்வதற்காகவும் இதை செய்து வருகின்றனர். பாகிஸ்தான் படை விரைவில் தாலிபான் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தவிருக்கிறது என்றார்.
மாயதோற்றத்தை தாலிபான் ஏற்படுத்தியுள்ளது...
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ரஹ்மான் மாலிக் கூறுகையில்,
ஹகிமுல்லா தாலிபான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை ஏற்று கொள்ள முடியாது. அவர் நியமிக்கப்பட்டிருப்பதை போன்ற மாயதோற்றத்தை தாலிபான் உருவாக்கியுள்ளது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் முன்னிலையில் இருந்து போராடியிருப்பார்.
அவராக வந்து சொன்னால் மட்டும் தான் அதை நம்ப முடியும். தற்போது தாலிபான்கள் தலைமை பதவிக்காக தங்களுக்குள் கடுமையாக மோதி வருகின்றனர் என்றார்.