கைதான தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு 2 சர்வதேச விருதுகள்
வாஷிங்டன்: கொழும்பு நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைப்புகள் விருது அறிவித்துள்ளன.
வடக்கு கிழக்கு ஹெரால்ட் என்ற இலங்கை மாதாந்தர இதழில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இன துவேஷம் ஏற்படும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக ஜெயப்பிரகாஷ் திசைநாயகம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி நடந்த பத்திரிகையாளர் தினத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, திசைநாயகத்தை குறிப்பிட்டு அவரது துணிச்சலான எழுத்துக்களை பாராட்டினார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 30ம் தேதி கொழும்பு நீதிமன்றத்தால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் துணிச்சலுடன் இலங்கையில் நடக்கும் உண்மைகளை எழுதியதற்காக அவருக்கு பீட்டர் மேக்லர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எல்லைகளற்ற ஊடகவியாளர்கள் என்ற அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த விருது வரும் அக்டோபர் 2ம் தேதி வாஷிங்டனில் வழங்கப்படும் என தெரிகிறது.
அதேபோல் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுக்கு திசநாயகத்தை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வரும் நவம்பரில் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது சிறையில் இருக்கும் திசநாயகம் சார்பில் இந்த விருதை யார் பெற்று கொள்வார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications