பொன்சேகாவை சாந்தப்படுத்த மனைவிக்குப் பதவி!
ராஜபக்சே அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பொன்சேகா. குறிப்பாக கோத்தபயாவும், பொன்சேகாவும் கூட்டாக செயல்பட்டுத்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தி வந்தனர்.
ஆனால் போர் முடிந்ததும் பொன்சேகாவை கழற்றி விட்டு விட்டனர் ராஜபக்சே சகோதரர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்தார் பொன்சேகா. நாட்டை விட்டே வெளியேறவும் அவர் தயாரானார்.
இதையடுத்து அவரை கூட்டுப் படைத் தலைவர் பதவியை கொடுத்து அமைதிப்படுத்த முயன்றனர் ராஜபக்சே சகோதரர்கள். ஆனாலும் டம்மி பதவியில் தன்னை உட்கார வைத்து விட்டார்களே என்ற கடுப்பில் உள்ளார் பொன்சேகா.
மேலும் அவருக்கு அரசியலில் ஈடுபட்டு உயர் பதவிகளை அடைய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் பொன்சேகா எந்த வகையிலும் தலை தூக்கி விடாமல் தடுப்பதில் ராஜபக்சே சகோதரர்கள் படு கவனமாக உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீர் முடிவாக பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்குப் பதவி கொடுத்துள்ளது ராஜபக்சே அரசு. இதன் மூலம் பொன்சேகாவை பகைத்துக் கொள்ளாமல் தங்கள் பக்கம் இழுக்க ராஜபக்சே தரப்பு முயல்வதாக கருதப்படுகிறது.
இலங்கை ராணுவத்தின் ரணவிரு சேவா ஆணையத்தின் தலைவியாக அனோமா பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இலங்கை ராணுவத்தின் சிங்க பிரிவின் மகளிர் சேவைப் பிரிவில் தலைவியாக 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதுதவிர இலங்கை ராணுவத்தின் மகளிர் சேவைப் பிரிவு தலைவியாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவருக்கு படை ஆணையத்தின் தலைவி பதவியைத் தந்துள்ளது பாதுகாப்புத்துறை.
தனக்கு வழங்கப்பட்ட பதவியை அனோமா ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் கோத்தபயா ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசினார்.