நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு - நீதிமன்றம் உத்தரவு
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு, முதல் வகுப்பு வசதிகள் வழங்குமாறு தடா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலி்ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையி்ல், நளினி தனக்கு முதல் வகுப்பு கேட்டு சென்னை தடா நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில்,
சிறையில் எனக்கு 1998 ம் ஆண்டுவரை முதல் வகுப்பு வழங்கப்பட்டது. ராஜீவ் கொலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு முதல் வகுப்பு தரவில்லை.
நான் சிறையில் எம்.ஏ., எம்.சி.ஏ., போன்ற பட்ட மேற்படிப்புகள் முடித்துள்ளேன். எனவே எனக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தடா நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், முதுநிலை பட்டதாரியான நளினிக்கு ஜெயிலில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.