ஆப்கன்- எண்ணெய் லாரி வெடித்து 56 தலிபான் உட்பட 90 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இரண்டு எண்ணெய் லாரிகள் வெடித்து சிதறியதில் 56 தலிபான் தீவிரவாதிகள் உட்பட 90 பேர் பலியாயினர்.
ஆப்கானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தஸ் மாகாணத்தில் இருந்து பாக்லன் பகுதிக்கு நேடோ படைகளுக்கு எண்ணெய் ஏற்றி சென்ற இரண்டு லாரிகளை தலிபான்கள் நேற்று இரவு கடத்தி சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் அந்த லாரியில் இருந்த எண்ணெயை சார்தாரா மாவட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்கி கொண்டிருந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த நேடோ விமான படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அப்போது தலிபான்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோதலின் போது அந்த எண்ணெய் லாரி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் சுமார் 56 தலிபான்கள் உட்பட 90 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து ஜெர்மனி தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவி படை வெளியிட்டுள்ள செய்தியில்,
நேடோ படைகள் தாக்குதல் நடத்தியது உண்மை தான். ஆனால், இதில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை. இறந்தவர்கள் அனைவரும் தலிபான்கள் என்கிறது.
இது குறித்து அந்த மாகாண ஆளுனர் முகமது ஓமர் கூறுகையில், இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இதில் தலிபான் அமைப்பின் தளபதி ஒருவர் உள்பட தீவிரவாதிகள் 45 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 45 பொதுமக்களும் பலியானார்கள் என்றார்.
ஆனால், பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என்றார். ஆனால், அப்பகுதி மக்கள் சுமார் 300 பேர் இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications