சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம்- புத்ததேவ், விஜயன் வரவில்லை
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் மூத்த தலைவர்களான புத்ததேவ் பட்டசார்ஜி மற்றும் பினரயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்திய லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தற்கு என்ன காரணம் என்பது குறித்த இறுதி விவாதம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் மற்றும் கேரள மாநில செயலாளர் விஜயன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
புத்ததேவுக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கடந்த பொலிட்பீரோ கூட்டத்திலும் புத்ததேவ் பங்கேற்கவில்லை என்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
லாவலீன் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள விஜயன், அந்த அதிருப்தி காரணமாக இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த மத்திய கமிட்டிக் கூட்டத்தில்தான், விஜயனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி கேரள முதல்வர் அச்சுதானந்தன் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே இன்றைய கூட்டத்தில் அச்சுதானந்தன் கலந்து கொள்ளவில்லை.