வைகோ, விஜயகாந்த், திருமா, எல்டிடிஇயிடம் பணம் வாங்கினர் - சொல்கிறார் சாமி
சென்னை: விடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம்.
அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
என் கையி்ல் ஆதாரம்...
அப்போது சாமி கூறுகையில்,
இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.
அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அடங்குவர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன்.
பாலு மீது கேஸ் போடுவேன்...
மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு மீது ரூ. 3000 கோடி ஊழல் வழக்கு தொடரப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அது அவர்களது கடமை. இந்த எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க எங்களது குழுவினருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஓட்டுப் போட்டால் ரசீது தர வேண்டும்...
ஏடிஎம் எந்திரங்களை போல மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குபதிவு செய்த வாக்காளர்களுக்கு ரசிது கொடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றது. அடுத்து வரும் தேர்தலில் எதிர்கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஆந்திராவில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவதால், அங்கு அடுத்தபடியாக ஒரு இந்து தான் முதல்வராக வர வேண்டும்.
இந்து மதத்தை காப்பாற்றவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனையை முன்னிறுத்தவும் பாஜகவுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இந்த பிரச்சாரம் 2011 சட்டசபை தேர்தல் வரை தொடரும்.
சோனியா மீதும் கேஸ் போடுவேன்...
சமீபத்தில் பெல்ஜியம், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஒரு விருது வழங்கியிருக்கிறது. இது அலங்காரத்துக்கானது என்றால் பிரச்சனையல்ல. அது ஒரு பதவி என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்க செய்ய வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு கொடுத்து, பின்னர் வழக்கு தொடர இருக்கிறேன் என்றார் சுப்பிரமணிய சாமி.












Click it and Unblock the Notifications