இந்தியாவுக்கு எதிராக சதி - தலிபானை சந்தித்தேன்: பாக். முன்னாள் எம்.பி.
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்ட பாகிஸ்தான் அரசு என்னை தலிபான் தலைவர் பைதுல்லா மசூத்தை சென்று சந்திக்க உத்தரவிட்டது என பாகிஸ்தான் முன்னாள் எம்.பி. ஷா அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷா அப்துல் அஜீஸுக்கு தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் போலந்து நாட்டு என்ஜினியர் ஒருவரை தலிபான்கள் கடத்தி சென்றனர். அந்த சம்பவத்தில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அஜீஸ் சென்றார். ஆனால் என்ஜீனியரைக் காப்பாற்ற அஜீஸ் முயற்சி செய்யவில்லை என்று கூறி அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அஜீஸ், தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
மும்பை தாக்குதல் சம்பவம் முடிந்த சில நாட்களில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் என்னை தலிபான் தலைவர் பைதுல்லா மசூத்தை சந்திக்க அனுப்பினார்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது தலிபான்கள் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் மசூத்திடம் வலியுறுத்துமாறு கூறினார்.
நான், மசூத் மற்றும் உலெமா குழுவை சேர்ந்த 15 பிரதிநிதிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினேன். இதற்காக தெற்கு வசிர்ஸ்தான் பகுதியில் உள்ள மகீன் பகுதியில் மூன்று நாள் தங்கியிருந்தேன். ஆனால், மசூத் முதலில் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்.
இறுதியாக அவர் இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு அரசுக்கு ஆதரவு தருவதாக ஒத்துகொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் தான் மசூத் சிஎன்என், பிபிசி மற்றும் பாகிஸ்தான் மீடியாவுக்கு பாகிஸ்தான் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்தியா விஷயத்தில் சேர்ந்து செயல்படுவோம் என பேட்டியளித்தார்.
மசூத், பாகிஸ்தான் ராணுவ தலைவருக்கு எழுதிய மூன்று கடிதங்கள் என்னிடம் இருந்தது. ஆனால், சமீபத்தில் நான் கைது செய்யப்பட்ட போது அரசு அதை பறிமுதல் செய்து விட்டது.
கடந்த மாதம் மே 27ம் தேதி நான் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் என்னை கடத்தி சென்றுவிட்டனர். அவர்கள் என்னை கைக்குட்டை மற்றும் போர்வையால் மூடி அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு சென்று கடுமையாக சித்ரவதை செய்தனர்.
மேலும், அவர்கள் என்னை சில குற்றங்களை நான் செய்ததாக ஒப்பு கொள்ள கூறினார். அதை நான் மறுத்து விட்டதை அடுத்து எனக்கு மீது போலந்து என்ஜினியர் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் என்றார்.