கள்ளக் காதலி வீட்டு முன் இளைஞர் தற்கொலை
ஈரோடு: சத்தியமங்கலத்தில் கள்ளக்காதலி போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து மனமுடைந்த இளைஞர் ஒருவர் கள்ளகாதலியின் வீட்டின் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகரைச் சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களுடன் ஸ்டெல்லா மேரியின் தம்பி பிரான்சிஸ் (33) என்பவரும் வசித்து வந்தார்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்த பிரான்சிஸ்க்கும், சத்தியமங்கலம் ராஜன் நகர் அர்ச்சுணன் காலனியை சேர்ந்த மகாளி என்பவர் மனைவி சுப்பம்மாள் (50) என்பவருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சுப்பம்மாள் தனக்கு ரூ. 1 லட்சம் தேவை என பிரானசிஸிடம் கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று பிரான்சிஸ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த சுப்பம்மாள், பிரான்சிஸ் தன்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி மிரட்டுவதாக பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் மனமுடைந்து போன பிரான்சிஸ் சுப்பம்மாள் வீட்டின் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.