5 இடங்களில் குண்டு-டெல்லியில் பெரும் புரளி-பீதி
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என போலீஸார் அறிவித்துள்ளனர். இதையடுத்து தலைநகரில் பதட்டம் தணிந்துள்ளது.
மத்திய டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டடம், சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் கன்னாட் பிளேஸில் உள்ள என்.டிஎம்.சி அலுவலகம் ஆகிய இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை 10 மணிக்கு போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து கட்டடங்களிலும் இருந்தோர் அப்புறப்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் ஐந்து கட்டடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இத்தகவல் புரளி என போலீஸார் அறிவித்துள்ளனர்.
புரளி கிளப்பிய நபர் யார் என்பதை அறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வெடிகுண்டு தகவல் புரளி என்று தெரிய வந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.