தமிழகத்தில் 12,000 ஆசிரியர்கள் நியமனம்-அமைச்சர்
மதுரை: தமிழகத்தில் விரைவில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சமச்சீர் கல்வி குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவாக அறிவித்துள்ளார். இதை எதிர்ப்பதற்கான காரணத்தை மெட்ரிக் பள்ளிகள் அரசிடம் முறையாக அணுகி தெரிவிக்கலாம்.
தமிழக முதல்வர் ஏற்கனவே தெரிவித்தபடி, ஆங்கில வழிக் கல்வி தொடரும். எனவே தேவையின்றி அச்சப்பட தேவையில்லை.
நான்கு முறை கல்வியை ஒன்றிணைத்து, ஒரே கல்வி முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சமூக நீதிக்கான இக்கல்வி முறை காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்டதாக கூற முடியாது. இதற்கான பாடத் திட்டம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன.
வரும் கல்வி ஆண்டில், 1 முதல் 6ம் வகுப்புகளுக்கு இம்முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான நிபுணர் குழுவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழிற்கல்வியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் கிரிஜா வைத்தியநாதன், விஜயகுமார் போன்றோரின் ஆலோசனைகளை பெற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில், விரைவில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார்.