Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்கீல்கள் மோதல்: 'போலீஸ் அத்துமீறியது உண்மை'-இணை ஆணையர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தின்போது போலீஸார் அத்துமீறியது உண்மைதான். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி வக்கீல்கள், அப்பாவி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் இணை ஆணையர் ராமசுப்ரமணி.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடந்த வக்கீல்கள் - போலீஸார் மோதல் தொடர்பாக, வக்கீல்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி வக்கீல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடியடி நடத்த உத்தரவிட்ட கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து இரு அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட்டை அணுகினர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில், சமீபத்தி்ல் ஏ.கே.விஸ்வநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன்தான் தடியடி நடத்த உத்தரவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இணை ஆணையர் ராமசுப்ரமணி தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதில் வக்கீல்கள் மற்றும் போலீஸாரின் பக்கம் உள்ள தவறுகளை பாரபட்சமின்றி அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ராமசுப்ரமணி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

என்னைப் பொறுத்தவரை பிப்ரவரி 19-ம் தேதி கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் முழுவதும் சரியே. அதேசமயம், போலீஸார் தங்களது எல்லையைத் தாண்டிச் சென்று விட்டனர் என்பதும் உண்மையே.

பிப்ரவரி 19ம் தேதி நடந்த சம்பவம் குறித்து முழுமையான, விரிவான விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அதில் யார் பக்கம் தவறு, யார் பக்கம் நியாயம் என்பது தெரிய வரும். அப்படி நடக்காதவரை, யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது.

நான் போலீஸார் செய்த தவறுகளுக்கு வக்காலத்து வாங்க விரும்பவில்லை. மாறாக, மிக மிக சிறிய அளவிலான வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட வக்கீல்கள் குழுவை, அமைதியை விரும்பிய பெரும்பான்மையான வக்கீல்கள் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்கத் தவறி விட்டனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி கூட, பிப்ரவரி 17ம் தேதி நடந்த சம்பவத்தில் (சுப்ரமணிய சாமி மீது வக்கீல்கள் முட்டை வீசி அநாகரீகமாக நடந்து கொண்டது) தொடர்புடைய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூட போலீஸார் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையவில்லை. எந்த வக்கீலையும் கைது செய்ய முனையவில்லை.

பிப்ரவரி 19ம் தேதியன்று கூட போலீஸார் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததற்கு ஒரே காரணம் - பாதுகாப்பு பணிக்காக மட்டும்தான்.

2009 மார்ச் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், என்னை சஸ்பெண்ட் செய்ய எந்த மாதிரியான முகாந்திரம் உள்ளது என்பதைத் தெரிவிக்கவில்லை. உண்மையில், என்னை சஸ்பெண்ட் செய்ய எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை ஒரு பக்கத்திற்கு (வக்கீல்களுக்கு) சாதகமாக இல்லை என்பதற்காக அந்த அறிக்கையை நிராகரித்து விட முடியாது. உண்மையில் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் காவல்துறையையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சாடியுள்ளார். அந்த அறிக்கையிலும் கூட என்னை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

போலீஸார் தடியடி நடத்தியது வன்முறையில் ஈடுபட்ட சில வக்கீல்களை ஒடுக்கத்தான். அப்போது போலீஸார் எல்லை மீறியதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. உண்மையில், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நீதிபதிகள், அப்பாவி வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அதேசமயம், போலீஸாரின் தனிப்பட்ட அத்துமீறல்களுக்காக என்னை பொறுப்பாக்குவது நியாயமல்ல. போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர் ஆகியோருக்கு அடுத்த நிலையில்தான் நான் இருந்தேன். மூத்த அதிகாரிகள் இருக்கும்போது அவர்களை மீறி என்னால் செயல்பட முடியாது என்று கூறியுள்ளார் ராமசுப்ரமணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+