'லவ் ஜிகாத்'-தடுத்து நிறுத்த கோரும் விஎச்பி
ராமேஸ்வரம்: கேரளாவில் 'லவ் ஜிகாத்' திட்டம் மூலம் தீவிரவாதிகளால் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் உள்ள அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்து தராதது வேதனை தருகின்றது. அந்த முகாம்களை பார்க்க சென்ற ஐ.நா. பிரதிநிதிளை அனுமதிக்க மறுத்து இலங்கையில் இருந்து வெளியேற சொன்னது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பல நூறுகோடி அளித்துள்ள மத்திய அரசு, அதை சரியான முறையில் இலங்கை அரசு பயன்படுத்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொண்டு இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும்.
கிராமக் கோயில் பூஜாரிகள் நலவாரியத்தில் 35,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் போதிய நிதி இன்றி கடந்த மூன்று ஆண்டில் 100 பேர் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.
'லவ் ஜிகாத்' திட்டத்திற்காக தீவிரவாதிகளால் கேரளாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை தடுக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சபரிமலை மகரஜோதி, அலகாபாத், உஜ்ஜயினி, ஹரித்துவார் கும்பமேளா போன்ற திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்துதர முன் வரவேண்டும் என்றார்.